

குரும்பூர்:
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை மெதுவாக நடைபெற்று வருவதால் வங்கியில் நகை மற்றும் பணம் வைத்திருந்த வர்கள் தங்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் வைப்பு தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் குரும்பூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கியிலிருந்து நகைகளை திரும்ப வழங்காமல் இருந்து வருகிறார்கள்.
கையாடல் செய்த நகைகள் இருக்கும் இடம் தெரிந்தும் அதனை மீட்டு பொதுமக்களுக்கு வழங்க கூட்டுறவு துறை அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட்டும் வெளியே சுதந்திரமாய் சுற்றுகின்றனர். காவல் துறையினர் அவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது கருணை கொண்டு நகை மற்றும் டெபாசிட் தொகைகளை மீட்டு விரைவில் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி எம்.பி. முதல்-அமைச்சர் பார்வைக்கு எடுத்து சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.