

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தெற்கு புது தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன்(வயது 56).
இவர் திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
அதே ஓட்டலில் திருச்செந்தூர் டி.ஆர்.நகரை சேர்ந்த பாலமுருகன் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வெள்ளையன் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த பாலமுருகன் சாப்பாட்டில் உப்பு அதிகமாக உள்ளதாக கூறியதாக தெரிகிறது.
இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சூடு எண்ணையை எடுத்து வெள்ளையன் மீது ஊற்றி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதனால் அவருக்கு முகம், தலை, வலது தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த வெள்ளையன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இது குறித்து புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.