

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர், ரோந்து கப்பல் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி.எஸ். வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது கன்னியா குமரியில் இருந்து சுமார் 95 கடல்மைல் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் சந்தேகமான வகையில் ஒரு மீன்பிடி படகு மீன் பிடித்துக் கொண்டிருந்ததை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர்.
உடனடியாக கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அந்த படகு இலங்கையை சேர்ந்தது என்பதும், அதில் இலங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக அவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் இன்று தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப் படுகின்றனர். கடந்த 9&ந் தேதி கன்னியாகுமரியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த 5 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.