பொங்கலையொட்டி கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை

பொங்கல் மற்றும் தைப்பூச நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கவேண்டும் என்று தூத்துக்குடி சீனிவாச சித்தர், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி-கால பைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தாக்கம் மீண்டும் பரவாமல் தடுத்திட கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழுநேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட மதவழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மக்கள் வழிபாடு செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்திட  இரண்டு தவணை தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஆகியவற்றை அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் போடுவதற்கு  நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தாலும், நோயின் தாக்கம் தீர இறைவனின் கருணையும் கண்டிப்பாக வேண்டும்.

 இத்தகைய சூழ்நிலையில் பாரம்பரியம்மிக்க தமிழர் திருநாளான தைப்பொங்கல், உழவர் திருநாள், கானும் பொங்கல் மற்றும் ஆன்மிக சிறப்புமிக்க தைப்பூச திருநாட்களில் பக்தர்கள் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மதவழிபாட்டு தலங்களுக்கு செல்ல அரசு திடீரென தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தைத்திருநாள் மற்றும் தைப்பூச  நாட்களில் திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட ஆன்மிக சிறப்பு பெற்ற முருகன் கோவில்களுக்கு ஏற்கனவே மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வழிபாடுகளை நிவர்த்தி செய்திட வருவது வழக்கமாகும். 

எனவே  தமிழக அரசு ஏற்கனவே விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்றி  மேற்கண்ட நாட்களில் கோவில்களில் பக்தர்கள் தடை ஏதும் இன்றி இறை வழிபாடு செய்திட அனுமதி வழங்கிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com