

புதியம்புத்தூர்:
புதியம்புத்தூரை அடுத்த புளியம்பட்டி மறுகால்தலையை சேர்ந்த வைகுண்டம், சீவலப்பேரியை சேர்ந்த வெங்கடாசலம், பெரியதுரை, குப்பக்குறிச்சி பழனிவேல், கசமுத்து, சங்கரன் ஆகிய 6 பேரும் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து மேய்த்து வருகின்றனர்.
இவர்கள் ஒன்றாக ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று மணியாச்சி அருகே உள்ள பாறைக்குட்டத்தில் தங்களது ஆடுகளை ஒரு தோட்டத்தில் கிடை போட்டிருந்தனர்.
இரவு ஆட்டுக்கிடை அருகே 6 பேரும் சேர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எழுந்த தீப்பொறி ஆடுகளின் மீது பட்டது. இதில் 17 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமானது. இதுதொடர்பாக மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.