

முள்ளக்காடு:
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக கட்சி மாவட்ட செயலாளர் மாலைசூடி பி.எம்.அற்புதராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமத்துவ மக்கள் கழக கட்சியின் நிறுவனத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்திக்கிறார்.
அவருக்கு சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் சார்பில் ஒன்றியம் நகரம் வாரியாக மாவட்டம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் முள்ளகாட்டில் இன்று காலை ஒன்றிய செயலாளர் பாரத், மற்றும் ஸ்ரீராம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஊர் பிரமுகர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு அவர் நீர் மோர், சர்பத் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம் சார்பாக பழையகாயல், ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி நகரம் சார்பிலும், திருச்செந்தூர் ஒன்றியம், ஆழ்வை கிழக்கு ஒன்றியம் சார்பிலும், பகுதிவாரியாக நிர்வாகிகள் ஆதரவாளர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
திருச்செந்தூர் ஒன்றியம் பள்ளத்தூரில் கட்சியின் கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.