

புதியம்புத்தூர்:
புதியம்புத்தூர் மெயின் ரோடு ஏற்கனவே குறுகலாக உள்ளது. வியாபாரிகளில் சிலர் இந்த குறுகலான ரோட்டிலும் ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் அடிக்கடி இந்த ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மேலமடத்தில் இருந்து நடுவக்குறிச்சி வரையிலுள்ள 1.5 கிலோ மீட்டர் தூரத்தை ஆமை வேகத்தில் தான் வாகனங்கள் கடந்து செல்ல முடிகிறது. 1.5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 20 நிமிடம் ஆகிறது. மேலும் சிலர் இரு சக்கர வாகனத்தை ரோட்டில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
குறுக்குச்சாலைக்கும்- தூத்துக்குடிக்கும் இடையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் செல்வதற்கு, வடபகுதியில் இருந்து தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் குறுக்குச் சாலை வழியாக ஓட்டப்பிடாரம் வந்து புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் செல்வது தான் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணமாக கூறப் படுகிறது.
இதேபோல் எதிர் திசை யிலும் தூத்துக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கின்றன. இந்த கனரக வாகனங்களை இவ்வழியாக வந்து போவதை தடுத்து நிறுத்தினால்தான் போக்குவரத்து நெருக்கடியை தடுத்து நிறுத்த முடியும்.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு புதியம்புத்தூரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் ஏற்பாட்டை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.