என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
    X

    தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்

    • பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை வழியாக பீடி இலை, மஞ்சள் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான ஏராளமான பொருட்கள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் ஈடுபடக் கூடியவர்களை கைது செயயப்படுவதும், பொருட்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதனை தடுக்க காவல்துறையும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் குலசேகரப்பட்டினம் கடற்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதி வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு படகுமூலம் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், மற்றும் குலசேகரப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது மனப்பாடு வடக்கு கடற்கரைபகுதி வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 35 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்கள் 85 மூட்டைகளில் இருந்தது தெரிய வந்தது இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×