

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.
மருத்துவமனையில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை பரிசோதித்து அதை உறுதி செய்யவும், சான்றளிக்கவும் 2006-ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த வாரியமானது பல பரிசோதனைகளுக்குப் பின் தரச்சான்று வழங்கி வருகிறது. இதுவரை உயரிய தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்று பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவக்கல்லூரிக்கான தரச்சான்றினை திருவண்ணா மலை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை பெற்று உள்ளது என்று மருத்துவக்கல்லூரி டீன் அரவிந்தன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொன்று சுமார் 2500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் உள்நோயாளிகளாக சுமார் 900 முதல் 1000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 1,038 பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் மூலம் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு உறுதுணையாக மருத்துவ அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.