search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை
    X

    கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை

    • கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் விஜய் (வயது 25).

    இவர் தொழில் ரீதியாக அவ்வபோது வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து திரும்பி வீட்டிற்கு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தகவலும் விஜய்யின் பெற்றோருக்கு கிடைக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் கடந்த 21- ந்தேதி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் விஜயின் செல்போன் எண்ணை சோதனை செய்த போது அவர் கடைசியாக அவரது நண்பரான திருவண்ணா மலை பே கோபுரம் தெருவை சேர்ந்த அருண் என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அருண் கூறியதாவது;-

    விஜயும், நானும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம், அவசர தேவைக்காக விஜயிடம் இருந்து நான் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். அதை என்னால் திருப்பி தர முடியவில்லை. இதனால் விஜய் என்னை பணத்தை திருப்பி கொடுக்குமாறு தொந்தரவு கொடுத்தார்.

    அவரை அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றேன். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தினோம். மது போதையில் இருந்த விஜயை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த விஜய் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×