காரிமங்கலத்தில் லாரியில் 300 லிட்டர் டீசல் திருட்டு

காரிமங்கலம் பகுதியில் லாரியில் இருந்து மர்ம கும்பல் 300 லிட்டர் டீசல் திருடினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தர்மபுரி:

நாமக்கல் மாவட்டம் திருங்செங்கோடு சங்ககிரி ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீஷ். 

இவர் சொந்தமாக டாரஸ் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது லாரியில் மதுரை ஒத்தகடையை சேர்ந்த சந்திரன் (வயது 50) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜதராபாத்தில் இருந்து காரிமங்கலத்துக்கு லாரியில் சரக்கு ஏற்றி வந்தார். வழியில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் 344 லிட்டர் டீசல் நிரப்பி உள்ளார். 

கடந்த 2-ந் தேதி காரிமங்கலத்தில் சரக்கை இறக்கினார். பிறகு தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்று மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு லாரியை காரிமங்கலத்தில் நிறுத்தி விட்டு சென்றார்.

இதையடுத்து சேலத்தில் இருந்து மாற்று டிரைவர் பாலு என்பவர் லாரியை ஓட்டிவர காரிமங்கலம் சென்றார். அங்கு லாரியில் டீசல் இருப்பை பார்த்த போது 300 லிட்டர் டீசல் குறைவாக தெரியவந்தது. 

இதுபற்றி சந்திரனிடம் கேட்டபோது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக தெரிகிறது. 

இதையடுத்து காரிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியில் டீசல் திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com