என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல்லில் ரெயில் மோதியதில் தொழிலாளி கால்கள் துண்டானது
- தொழிலாளி மது போதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
- ரெயில் மோதியதில் தொழிலாளியின் கால்கள் துண்டானது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஆசாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சுப்புராசு (45). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மது போதைக்கு அடிமையாகி, திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள போதை அடிமை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சீலப்பாடி டாஸ்மாக் கடை அருகே மீண்டும் மது போதையில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு 2 கணுக்கால்கள் துண்டானது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






