ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளதை அகற்றி விட்டு பாளை கே.டி.சி. நகரில் தமிழில் வரவேற்பு பலகை வைக்க வேண்டும்-மாநகராட்சி அலுவலகத்தில் மனு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும்.
மேயர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த போது எடுத்தபடம். அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.
மேயர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த போது எடுத்தபடம். அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர் தாணுமூர்த்தி, உதவி பொறியாளர் வாசு தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலத்தின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இரும்பு சட்டங்களால் 'திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி' என ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இது நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும். எனவே அங்குள்ள ஆங்கில எழுத்துக்களை அகற்றி விட்டு தமிழிலில் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

34-வது வார்டு கவுன்சிலர் சர்மிளா கொடுத்த மனுவில், எனது வார்டுக்குட்பட்ட சமாதான புரம் முதல் மிலிட்டரி லைன் வரையிலான 60 அடி சாலையில் 20 அடிகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற செல்லும் போது அங்கு இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடி யாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com