பல்லடம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்லடம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களிடையே ஒருவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் திருடர்கள் தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்பட்டியை சேர்ந்த சூசை என்பவரது மகன் இயேசுராஜ் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு பொல்லிக்காளிபாளையம் பகுதியில் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுகுறித்து அவர் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது வீட்டை விட்டு சற்று தள்ளி கணேஷ் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போடவே அங்கிருந்து திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவினாசி பாளையம் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com