

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சுருதி (வயது 19). இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அய்யலூரை சேர்ந்தவர் அஜீத் (27). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். வடமதுரைக்கு பைனான்ஸ் பணம் வசூல் செய்ய வரும் சமயத்தில் சுருதியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.
2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி மணப்பாறையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரக்கூறி பெண்ணின் பெற்றோர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோர் தங்களை தேடுவதை அறிந்ததும் காதலர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு தஞ்சமடைந்தனர்.
இன்ஸ்பெக்டர் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பெண்ணின் பெற்றோர் தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி தங்களுக்கு மகளே வேண்டாம் என எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதனையடுத்து காதல் கணவருடன் ஒற்றுமையாக சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.