search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவை கண்காணிக்க  வேண்டும் - தூத்துக்குடி மேயர் உத்தரவு
    X

    கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசிய காட்சி.

    மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் - தூத்துக்குடி மேயர் உத்தரவு

    • தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கோடை காலத்தை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உதவி செயற்பொறியாளர்கள் , துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், பொது மக்களுக்கு சிரமமின்றி குடிநீர் கிடைக்க வேண்டும். கோடை காலங்களிலும் தொய்வின்றி குடிநீர் வழங்குவதற்காக தேவை யான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும், பொது மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கோடை காலத்தை சமாளிக்க தூத்துக்குடி மாநகராட்சி தயாராக இருக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    தொடர்ந்து தூத்துக்குடி கலைஞர் டேங்க், பண்டாரம்பட்டி, மடத்தூர், சுப்பையா பூங்கா, வி.வி.டி. பூங்கா, குருஸ்புரம் மற்றும் ரூரல் (செயின்ட் மேரிஸ் காலனி) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை மேயர் ஆய்வு செய்தார்.

    இதில் ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி, மடத்தூர் மற்றும் ரூரல் பகுதிகளில் சில வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வரும் நீரின் அளவும் மிகவும் குறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி களை பார்வையிட்டு குடிநீர் சீராக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    5-வது வாா்டுக்குட்பட்ட அன்னை வேளாங்கன்னி நகா் பகுதியில் உள்ள தெருக்களுக்கு சீரான குடிநீா் கிடைக்கவில்லை என்ற மக்களின் புகாரைத் தொடர்ந்து அங்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது நீர் செல்லும் குழாய் பாதையில் தடையாக கற்கள் இருந்ததை கண்டறிந்து அதனை அகற்ற உத்தரவிட்டு இனிமேல் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று மக்களிடம் உறுதி அளித்தார்.

    மேயருடன் மண்டல தலைவர் நிர்மல்ராஜ் , மாநகராட்சி கவுன்சிலர் அந்தோணி மார்ஷலின், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன் ஜாஸ்பர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் அந்தோணி சிவக்குமார், டேனி, மார்ஷல், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×