கூடலூர் அருகே கால்வாயில் சிக்கி தவித்த குட்டி யானை

குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது என்றனர்.
கூடலூர் அருகே கால்வாயில் சிக்கி தவித்த குட்டி யானை
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை நேற்று தாயுடன் உலா வந்தது.

பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து. வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது. தாய் யானை பிளிறியபடி, அதனை மீட்க போராடியது.

தகவல் அறிந்த வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று தாய் யானையை அங்கிருந்து விரட்டினர்.

தொடர்ந்து குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

பின்னர் குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்த்தனர். தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குட்டி யானையை கால்வாயில் இருந்து பாதுகாப்பாக மீட்டு தாயுடன் சேர்த்து கண்காணித்து வருகிறோம்.

குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com