search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் செம்மொழி பூங்கா கட்டுமான பணி ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கும்
    X

    கோவையில் செம்மொழி பூங்கா கட்டுமான பணி ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கும்

    • செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது.
    • 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் தென்ேமற்கு பருவமழை துவங்கியுள்ளதால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களை உருவாக்கும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, வார்டு தோறும் இப்பணியில் 6 ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இது, தற்போது 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. கணபதி, பீளமேடு, செட்டி வீதி போன்ற பகுதிகளில் டெங்கு கொசு பரவல் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பாதாள சாக்கடை பணி நிறைவு பெற்ற இடங்களில் தார்ச்சாலை புதுப்பிப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வார்டு தோறும் 50 சதவீத தார்ச்சாலைகளை புதுப்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது.

    கோவை மாநகரில் தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 500 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதத்தில் 5 ஆயிரம் தெருநாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆர்.எஸ்.புரம் புரூக் பீல்டு சாலை, மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் ரோடு. ரத்தினபுரி, தடாகம் ரோடு-டி.பி.ரோடு சந்திப்பு, சிங்காநல்லூர் காமராஜர் ரோடு உள்ளிட்ட மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து, ரூ.12.63 கோடியில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி மிக விரைவில் தொடங்க உள்ளது.

    காந்திபுரம் சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ்நிலையம் ரூ.3.5 கோடியில் புனரமைக்கப்பட உள்ளது. சரவணம்பட்டியில் சுமார் 1 ஏக்கர் நிலத்தில் ரூ.1.2 கோடியில் "சயின்ஸ் பார்க்" கட்டப்பட உள்ளது. பீளமேடு டைடல் பார்க் பகுதியில் ரூ.15 கோடியில் தார்ச்சாலை, பூங்கா, நடைபாதை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோவையில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, குளக்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடந்து வருகிறது.

    ஏற்கனவே, 2 இடங்களில் இப்பணி நிறைவடைந்துள்ளது. இன்னும் 4 இடங்களில் இப்பணி நடந்து வருகிறது. ஆர்.எஸ்.புரம் பூமார்க்கெட் உள்பட நகரில் பல்வேறு இடங்களில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணியும் நடந்து வருகிறது.

    கோவை மத்திய சிறைவளாகத்தில், உலகத்தமிழ் செம்மொழி பூங்கா செம்மொழி மாநாடு நினைவாக, செம்மொழி பூங்கா ரூ.172 கோடியில் அமைய உள்ளது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் 28ம் தேதி விடப்பட்டது.

    தற்போது தொழில் நுட்ப ரீதியிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம், முதல் வாரத்தில் இத்திட்டப்பணி தொடங்கும். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    இப்பூங்கா பல்வேறு அடுக்குகளாக மிக பிரம்மாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் அமைய உள்ளது. 18 மாதத்தில் இத்திட்டப்பணி நிறைவுபெறும். இது, கோவையின் மற்றொரு அடையாளமாக இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால், சிறுவாணி அணையில் நீர் இருப்பு போதுமான அளவு இல்லை.

    ஆனாலும், சிறுவாணி பயன்பாட்டாளர்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் பில்லூர் குடிநீர் திட்டக்குழாய் இணைப்பு இல்லாத இடங்களுக்கு சிறுவாணி மற்றும் ஆழியார் குடிநீர் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு கமிஷனர் மு.பிரதாப் கூறினார்.

    Next Story
    ×