

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சேர்ந்தவர் பிரவீன் (வயது 23). இவரது மனைவி மகாலட்சுமி (21). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் காதல் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரவீன் தனது மனைவி மகாலட்சுமி உடன் இன்று மதியம் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தஞ்சமடைய வந்தார்.
இதனை பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மகலட்சுமி கூறும்போது :-
நாங்கள் ஒருவருக்கொ ருவர் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள். இருவரும் உறவினர்கள் தான். எங்கள் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார்.
இதனால் நாங்கள் வேறு வழியின்றி கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருவைகாவூரில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். இதனை அறிந்த இரு வீட்டாரும் எங்களை அச்சுறுத்தி வருகின்றனர். குறிப்பாக எனது கணவர் பிரவீன் சகோதரர் ராகேஸ் மற்றும் சிலரை எனது குடும்பத்தினர் பிடித்து வைத்துள்ளனர். மேலும் எங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
எனவே பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைய வந்துள்ளோம். மேலும் எங்கள் குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டுள்ள எனது கணவர் சகோதரர் மற்றும் அவர்களது உறவினர்களை மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் காதல் தம்பதியிடம் மனு வாங்கி கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து காதல் தம்பதியினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.