

சுவாமிமலை:
சுவாமிமலை அருகே கொட்டையூரை சேர்ந்த சிவாவுக்கு சொந்தமான லாரியை செல்வம் என்பவர் ஓட்டி வந்து மூப்பகோயில் பைபாஸ் சாலை முத்தமிழ் நகரில் தனது நண்பர் குமார் உதவியுடன் லாரியை பின்பக்கமாக நகர்த்தி உள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் ராஜ்குமார் (28) என்பவர் மீது இடிப்பது போல் லாரி வந்ததால் அவருக்கும், செல்வம் மற்றும் குமார் ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது.
இதில் படுகாயம் அடைந்த குமார் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், குமார், அவரது நண்பர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து ராஜ்குமாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் தனித்தனியே சுவாமிமலை போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவ்வழக்கில் தொடர்புடைய மூப்ப கோயில் செல்வம் மகன் பிரபாகரன் (வயது 30), மேலக்கோட்டையூர் ரவிச்சந்திரன் மகன் பால்வாடி என்கிற மணிகண்டன் (26), பாபு செட்டிகுளம் முருகன் மகன் நிஷாந்த் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.