

பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள ராயந்தூர் ஆதிதிராவிடர் தெருவில் காமராஜ் என்ற விவசாயத் தொழிலாளியின் மனைவி அருவம்மா (வயது 70) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள செந்தலை கிராமத்தில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். வீட்டின் முன் பகுதியில் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
உடலுக்கு அருகே செந்தலையில் இருந்து வந்தவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மாட்டுக்
கொட்டகையின் சிறியமண் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் செந்தலை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பத்மா (55) என்பவர் இடிபாடுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செந்தலையை சேர்ந்த தாமரைச்செல்வி, அருமை, அஞ்சலை, தனலட்சுமி ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து பூதலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பூதலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.