'தச்சநல்லூர் மண்டலத்தில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை'- குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் புகார்

2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக பைப்புகளை உடைத்து விட்டனர்.சங்கர் நகர் மதுரை ரோடு இ.பி. அலுவலகம் முதல் கணபதி காலனி வரை கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை.
பொதுமக்களிடம் மேயர், துணைமேயர் மனுக்கள் வாங்கிய காட்சி.
பொதுமக்களிடம் மேயர், துணைமேயர் மனுக்கள் வாங்கிய காட்சி.
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்கள் மனு

இதில் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் துணை மேயர் ராஜு, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தச்சநல்லூர் மண்டலம் 2-வது வார்டை சேர்ந்த சடாமுனி என்பவர் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

குடிநீர் குழாய்கள்

2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு அனைத்து தெருக்களிலும் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு பாதாள சாக்கடை பணிக்காக அந்த பைப்புகளை உடைத்து விட்டனர்.

தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த பணியும் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. தெரு விளக்குகளும் சரியாக எரியவில்லை.

சங்கர் நகர் மதுரை ரோடு இ.பி. அலுவலகம் முதல் கணபதி காலனி வரை கடந்த 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்துள்ளார்.எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி இருந்தார்.

குடிநீர் பிரச்சனை

மேலப்பாளையம் மண்டலம் 40-வது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நல சங்கத்தினர் தலைவர் கந்தையா தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இப்பொழுது மக்கள் அனைவரும் மாநகராட்சி குடிநீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தற்போது வரும் குடிநீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே தினமும் 1½ மணி நேரம் எங்கள் பகுதியில் தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com