தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை.
தீபாவளிக்கு முன்பே வாரச்சந்தை அமைக்க ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை
Published on

ஈரோடு:

தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடந்து வருகிறது. இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் இந்த வாரச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன் ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை 60 ஆண்டுகளாக நமது அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் 720 வியாபாரிகள் பயன் பெற்று வந்தனர். 2018-ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய போது வாரச்சந்தை வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனி மார்க்கெட் வணிக வளாக காலி இடத்தில் மீண்டும் வாரச் ச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

ஆனால் இதுவரை வாரச் சந்தை அமைக்கப்பட வில்லை. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச் சந்தையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்பதில்லை.

எனவே மாநகரத்தின் மையப் பகுதியான கனி மார்க்கெட்டில் மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால் அதை நம்பியுள்ள 720 வியாபாரிகளும் பயன்பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com