அரசு பஸ் கண்ணாடியை கல் வீசி உடைத்த ரவுடி கைது
சங்கரன்கோவில்:
ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா.
இவரது மகன் சுந்தரம் என்ற கல்யாண சுந்தரம் (வயது 30). இவர் மீது ஆலங்குளம், தூத்துக்குடி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் இவரது பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.
கல்யாண சுந்தரம் சமீப காலமாக சங்கரன்கோவிலில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு மதுபோதையில் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே கல்யாண சுந்தரம் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது.
அந்த பஸ் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது அதனை கல்யாண சுந்தரம் வழிமறித்துள்ளார். போதையில் இருந்த அவர், அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார்.
இதுதொடர்பாக பஸ் டிரைவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்தனர்.

