கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

கருத்தரங்கின் முதல் நாளில் இயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

கோவில்பட்டி:-

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு சார்பாக 'ரெய்னாக்ஸ்-23' என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் 2 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முன்னாள் மாணவரும் நெல்லை, ஆல்பா பிசினஸ் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் இயக்குனர், மொபியோனிக்ஸ் ஏஐ-யின் இணை நிறுவனருமான பி.சிவகுரு ஸ்ரீநிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் மாணவர்கள் தற்போதைய தொழில்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அவர் தகவல் தொழிநுட்ப துறை கூட்டமைப்பிற்கான யூடியூப் சேனலையும், காணொலியையும் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கின் முதல் நாளில் இயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர கற்றல் குறித்து பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதில் இயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் அதன் தற்போதைய மற்றும் எதிர்கால போக்குகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி உதவி பேராசிரியர் எஸ்.சிதம்பரம் இ-காமர்ஸ், ஆட்டோமொபைல் மற்றும் ஸ்மார்ட்ஹோம் அப்ளிகேஷன்களில் மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பேசினார்.

இரண்டாம் நாளில், மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிககள் நடத்தப்பட்டது, மேலும் மாணவ- மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தனர். இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

முன்னதாக, மாணவி ஆர்த்தி வரவேற்றார். மாணவி ஆர்த்தி அபிராமி கருத்தரங்கம் பற்றி எடுத்துரைத்தார். மாணவர் ஆனந்த் விழா தலைமையுரை வழங்கினார். மாணவி கரிஷ்மா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இறுதியாக மாணவி கவிதா நன்றி கூறினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படியும் தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் கே.ஜி.ஸ்ரீனிவாசகன் அறிவுறுத்தலின்படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனிதா, ரம்யா, துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com