

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சீர் வரிசைகளுடன் வீடு வீடாக சென்று மாணவர் சேர்த்து நடத்தினர். தொடர்ந்து சிறுவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து தங்களது அரசு பள்ளியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினர்.
மேலும் நோட்டு, பேனா, பென்சில், சிலேடு, சாக்பீஸ், பெல்ட், டிபன் பாக்ஸ், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பள்ளி படிப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு தாம்பூலத்தில் வைத்து அதனை சீர்வரிசையாக சிறுவர்களிடம் வழங்கினர். இது அந்த பகுதியில் உள்ள பெற்றோரையும், பொது மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சித்ரா கூறும்போது:-
அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகள் நிறைவடைந்தும் சிறப்பாக கல்வி சேவை ஆற்றி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் காற்றோட்டமான தனித்தனி வகுப்பறைகள் உள்ளன. ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சத்துள்ள மதிய உணவு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குகிறோம். மேலும் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சி பெரும் பள்ளியாக உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்த கொரோனா விழிப்புணர்வு போட்டியில் மாநில அளவில் எங்களுடைய பள்ளி மாணவி 2-ம் இடம் பிடித்துள்ளார். அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளியில் இருக்கும் பொழுது நாம் ஏன் தனியார் பள்ளிகளை நாடி செல்ல வேண்டும் என்றார். மேலும் அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து பதாகைகளை ஏந்தியபடி ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜ திலகம், இல்லம் தேடி கல்வி அலுவலர்கள் நிவேதா, வைஷ்ணவி, மதிமொழி, ஆனந்தராஜ், அன்புசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.