search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 14 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு
    X

    சேலம் மாவட்டத்தில் 14 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு

    • சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது.
    • தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும்.

    சேலம்:

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2, இணையவழி தேர்வு தொடர்பாக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது,

    சேலம் மாவட்டத்தில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வு, 14 கல்லூரிகளில் கணினி மூலம் நடைபெற உள்ளது. காலை மற்றும் மாலை வேளை என இரு வேளைகளிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

    இந்த தேர்தலை 36 ஆயிரத்து 113 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வுகள் காலை தேர்வுக்கு 7:30 மணிக்கு, பிற்பகல் தேர்வுக்கு 12:30 மணிக்கு தேர்வு மையத்துக்கு வருகை புரிய வேண்டும். இத்தேர்வுக்காக மாவட்ட தேர்வு கண்காணிப்பு குழு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 தேர்வுகளை கண்காணிக்கும் போது கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தலைமையில் 4 தேர்வு மையங்களுக்கு ஒரு பறக்கும் படைகுழு செயல்பட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வுகள் நடைபெறும் 14 தேர்வு மையங்களிலும் காவல்துறை போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், மாதிரி தேர்வுகள் மற்றும் தேர்வு நாட்களில் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தேசிய தகவல் அலுவலர் வழங்கிடவும், அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ குழுக்கள் அமைத்து தேர்வு மையங்களில் நோய் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை கண்காணித்து வழிநடத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாள்களில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மேற்கொள்ளவும், தடை இல்லாமல் மின்சாரம் மற்றும் தேர்வுகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் தேர்வு மைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வு தாள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுவதை அனைத்து பொறுப்பு அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வருவாய் அதிகாரி மேனகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், கோட்டாட்சியர் விஷ்ணு வர்த்தினி, மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×