search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்
    X

    பழனியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்

    • வாலிபரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாசலில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 2 மணியளவில் ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க மர்ம நபர் முயன்றுள்ளார். அப்போது எந்திரத்தை உடைக்க முயன்றபோது அலாரம் அடித்துள்ளது. இருந்தபோதும் ஏ.டி.எம். மிஷினை உடைக்க முடியாததால் கொள்ளையன் வேகமாக வெளியேறினார். இதையடுத்து அலாரம் அடித்து வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. இதனால் வங்கி மேலாளர் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் கொள்ளையனை தேடும் பணியில் இறங்கினர். அப்போது வங்கி அருகில் இருந்த 2 செல்போன் கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அந்த கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ரூ.16,000 பணம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவர் உடமைகளை சோதித்த போது செல்போன்கள் மற்றும் திருடு போன ரூ.16 ஆயிரம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தான் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதையும், செல்போன் கடையில் கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டார்.

    அவரிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

    விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த சூரியகாந்தி (வயது 21) என தெரிய வந்தது. அவரை கைது செய்து இவர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையனை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

    Next Story
    ×