ஓமலூர் சிவன் கோவிலில் திருட்டுபோன சாமி சிலை, பாவை விளக்கு மீட்பு- தொழிலாளி கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் செவ்வாய்சந்தை பகுதியில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.சிலை திருட்டில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மீட்கப்பட்ட சாமிசிலை, விளக்கு
மீட்கப்பட்ட சாமிசிலை, விளக்கு
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் செவ்வாய்சந்தை பகுதியில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பித்தளையால் செய்யப்பட்ட 1.5 அடி உயரமுள்ள ஹயக்ரீவர் சாமி சிலை, பாவை விளக்கு ஆகியவை திருட்டு போனதாக, கோவிலின் குருக்கள் விஸ்வநாதர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சாமி சிலையுடன் ஒருவர் நின்று கொண்டு இருப்பதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார், அங்கே சாமி சிலையுடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் ஓமலூர் அருகேயுள்ள சிக்கனம்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், அவர் வைத்திருந்தது ஓமலூர் சந்தைப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்த 1.5அடி உயர ஹயக்ரீவர் பித்தளை சிலை, பாவை விளக்கு என்பது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஈஸ்வரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி சிலை எங்கு கொண்டு செல்லப்படுகிறது? சிலை திருட்டில் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கைதான ஈஸ்வரன் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com