கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என கூறி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த பெண் கைது

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என கூறி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த திட்டக்குடி பெண் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

கடலூர்:

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் ஒரு பெண் 4 பேருடன் பழைய மகப்பேறு பிரிவுக்கு சென்றார். பின்னர் அந்த பெண், மேஜையில் இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தொடங்கியதாக தெரிகிறது. மேலும் அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் அதிகார தோரணையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த செவிலியர் ஒருவர், இது பற்றி நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமரனிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரும், சக டாக்டர்களும் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை பிடித்து கடலூர் புதுநகர் போலீசில் டாக்டர்கள் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் திட்டக்குடி அருகே செய்யூர் வடக்கு தெருவை சேர்ந்த வெண்ணிலா(வயது 35) என்பதும், இவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை டாக்டர் என்று கூறி திருமணம் செய்ததாகவும் தெரிகிறது. திருமணத்திற்கு வெண்ணிலாவின் உறவினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்போது தன்னை டாக்டர் என்று நிரூபிக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து, மருத்துவம் பார்த்ததும் தெரிய வந்தது. இதையடுத்து நிலைய மருத்துவ அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com