கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1½ கோடி மோசடி- பெண் அதிகாரி கைது

உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்ததாக பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி (வயது 58). கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ (51). நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார் (47), இவர்கள் 3 பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 நகை கடன் வழங்கியுள்ளனர்.

வங்கியில் தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்தார். அந்த புகாரானது காஞ்சிபுரத்தில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியிடம் விசாரணைக்கு வந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 கோடியே 64 லட்சம் மோசடி செய்திருப்பது உண்மையென தெரியவந்தது. இதை தொடர்ந்து வங்கியின் செயலாளர் கலைச்செல்வி, நகை மதிப்பீட்டாளர் விஜயகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கலைச்செல்வி சென்னை புழல் சிறையிலும், விஜயகுமார் செங்கல்பட்டு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய வங்கியின் கண்காணிப்பாளரான ஜெயஸ்ரீ தலைமறைவானதை தொடர்ந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com