search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பு.புளியம்பட்டி அருகே கிராமத்தில் புகுந்து 2 ஆயிரம் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
    X

    பு.புளியம்பட்டி அருகே கிராமத்தில் புகுந்து 2 ஆயிரம் வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

    • எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது.
    • பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி வனப்பகுதிகளில் யானைகள் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களில் அடிக்கடி புகுந்து விடுகிறது. மேலும் அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த பவானிசாகர் விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சித்தன் குட்டை அய்யம்பாளையம் செல்வ கணேசபுரம் கிராமத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. இதை தொடர்ந்து அந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை உடைத்து சுவைத்து தின்று சேதப்படுத்தியது.

    இதையடுத்து ஓட்டு சாலைகள், தண்ணீர் குழாய்கள், கம்பி வேலிகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது. இதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் டிராக்டர் மற்றும் வனத்துறை வாகனங்கள் மூலம் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை காட்டு யானையை வனத்துக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அந்த ஒற்றை யானை டிராக்டரை காலால் உதைத்து சேதப்படுத்தியது. மேலும் வனத்துறை ஜீப் மற்றும் வாகனத்தை யானை விரட்டி சென்றது. இதையடுத்து அதன் தும்பிக்கையால் தூக்கி அடித்ததில் வாகனம் முன்பகுதி சேதமடைந்தது.

    மேலும் பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு ஒற்றை காட்டு யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் ஏராளமான விளை நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்து வருகிறோம். வாழை மரங்களை நடவு செய்து அறுவடைக்கு வரும் வரை பாதுகாத்து வருகிறோம்.

    ஆனால் வாழைதார்கள் அறுவடைக்கு வரும் முன் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகிறது. மேலும் இரவு நேரங்களில் யானைகள் வருவதால் நாங்கள் அதை விரட்டி செல்லும் போது எங்களுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம். எங்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.

    எனவே இது போன்ற காட்டு யானைகளால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க வேண்டும். யானைகள் உருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

    Next Story
    ×