search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததால் மது ஊற்றிக் கொடுத்து கணவரை கொன்ற மனைவி
    X

    நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததால் மது ஊற்றிக் கொடுத்து கணவரை கொன்ற மனைவி

    • இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா (வயது 27). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே மனைவியின் நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கற்பகராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சிந்தப்பள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

    இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல் இருவரும் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி கற்பகராஜா விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று தினமும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவும் கற்பகராஜா மதுபோதையில், விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலை கற்பகராஜா, மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் டவுன் போலீசார் கற்பகராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் கற்பக ராஜாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் துருவி துருவி விசாரித்தனர்.

    அப்போது விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதால் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். பின்னர் மதுவாங்கி வைத்துக் கொண்டு அவரை சமாதானம் பேச அழைத்து அவருக்கு மதுவை அதிகமாக ஊற்றிக்கொடுத்தோம். கற்பகராஜூக்கு போதை தலைக்கேறியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அதற்கு உதவியாக அவருக்கு சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை, அவரது கணவர் இருந்தனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கணவனை கொன்ற விஜயலட்சுமி (25), அவரது தாயார் பழனியம்மாள் (48), திருநங்கை ஸ்வீட்டி (25), இவரது கணவர் வேலாயுதம் (25) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×