

ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரியப்பன் (வயது 46). இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. மற்றொரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை.
இதற்கிடையே சந்தன மாரியப்பன் கடந்த 13 ஆண்டு காலமாக கண் பார்வை குறைபாட்டாலும் கை,கால் செயல்படாமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தார். பாண்டிசெல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சந்தன மாரியப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பாண்டிச்செல்வி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தன மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சந்தனமாரியப்பன் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பாண்டிச்செல்வியிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
இதில் கணவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதால் அவரை கட்டையால் அடித்தேன், பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறினார்.
இதையடுத்து பாண்டிச்செல்வியை தளவாய்புரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.