சாலை வசதி கேட்டு தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திடீர் தர்ணா

வனப்பகுதியில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.மனுவை பெற்றுக்கொண்டு சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தி உறுதி அளித்தார்.
சாலை வசதி கேட்டு தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் திடீர் தர்ணா
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சி கோட்டூர் மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாலை வசதி இல்லாமல், அத்தியாவசிய தேவைகளுக்கு கழுதை மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை. சாலை வசதி இல்லாததால் மேற்படிப்புக்கு மலை கிராமத்தில் இருந்து அப்பகுதி குழந்தைகள் செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தி நின்று விடுகின்றனர்.

வனப்பகுதியில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை வசதி கேட்டு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து மனு கொடுக்க வந்திருந்தனர்.

அப்பொழுது போலீசார் 5 பேர் மட்டுமே மாவட்ட கலெக்டரை சந்திக்க உள்ளே செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் எல்லோரையும் விட வேண்டுன் என மலை கிராம மக்கள் தெரிவித்து, வாக்குவாதம் செய்து, நுழைவாயிலில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 10 பேர் மட்டும் உள்ளே சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்டு சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தி உறுதி அளித்தார்.

கிராம கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com