search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி முன்னாள் நகராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X

    சோதனை நடைபெற்ற முன்னாள் நகராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீடு.

    பண்ருட்டி முன்னாள் நகராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    • பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி காமராஜர் நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நகராட்சி தலைவராக இருந்துவந்தார். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம். இவர் 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தார். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் சமீபத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டு குத்தகைக்கு விட்டதில் பல லட்சம் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அப்போது கமிஷனராக இருந்த பெருமாள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறார்.

    இதனைத்தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை பண்ருட்டி சென்றனர். பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் பன்னீர்செல்வம் வீடு, பண்ருட்டி 4 முனை சந்திப்பில் உள்ள பன்னீர்செல்வம் அலுவலகம், சென்னையில் உள்ள முன்னாள் கமிஷனர் பெருமாள் வீடு உள்ளிட்ட 5 இடங்களில், காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் பண்ருட்டி கந்தன் பாளையத்தில் உள்ள முன்னாள் ஒன்றிய செயலாளர் மலா பெருமாள் வீட்டிலும், பத்திர எழுத்தர் செந்தில்முருகா, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் மோகன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. மாலா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆவார். மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது வீட்டில் இருந்து யாரையும் வெளியே அனுப்பவில்லை. வெளியில் இருந்து யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சோதனையின் முடிவில்தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

    சோதனை நடைபெறும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். முன்னாள் நகராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய விவகாரம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×