

கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 40). இவரிடம் தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த திருமணி, பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி ஆகிய இருவரும் சேர்ந்து ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி மயிலியம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு மனையின் போலி ஆவணத்தை காட்டி, இந்த மனையை உங்களுக்கு வாங்கி தருகிறோம் என்று கூறி ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொண்டனர்.
பின்னர் பணத்தை திருப்பி தராமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து தினேஷ் குமார் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணத்தை காட்டி பணத்தை பறித்த திருமணி, ஸ்ரீதேவி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.