

மதுரை:
மதுரை கூடல்புதூர் அசோக்நகர் 2-வது தெரு பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று காலை பாதாள சாக்கடை திட்டப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரும் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டார். இதற்காக ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது.
அப்போது பள்ளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் மீது மணல் சரிந்து விழுந்தது. இதில் அவர் மண்ணில் புதைந்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை மீட்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். பள்ளத்தை தண்ணீர் மூடி விட்டதால் அவரது உடலை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் மணலில் புதைந்த சக்திவேல் உயிருடன் புதைந்து பலியாகி விட்டார். அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 1 மணி வரை அவரது உடலை மீட்க முடியவில்லை. இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.