

சென்னை:
14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து கோட்டை நோக்கி இன்று பேரணி நடந்தது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பேரணிக்கு சி.ஐ டி.யூ. தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் , பொருளாளர் சசிகுமார் முன்னிலை வகித்தனர்.
சென்னை பல்லவன் இல்லம் முன்பிருந்து 2 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் கோட்டை நோக்கி கோஷங்கள் முழங்கியபடி பேரணி செல்ல முயன்றனர்.
அப்போது பல்லவன் சாலையில் தடுப்புவேலி அமைத்து போக்குவரத்து ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பேரணிக்கு அனுமதி இல்லாததால் போலீசாருக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தினரை போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.அதன்பின் போக்குவரத்து ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
பேரணி குறித்து சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தராஜன் கூறியதாவது:-
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும். செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசு வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் பணம் 11 ஆயிரம் கோடியை போக்குவரத்து கழகங்கள் செலவு செய்துவிட்டன.
தொழிலாளர்கள் பணத்தை திரும்ப வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்கக வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசி முடிக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள், அகவிலைப்படி உயர்வு. மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும்.பேட்டா, இன்சென்டிவ் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.