

நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவை சேர்ந்தவர் வேலு என்ற ஆண்டியப்பன் (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலட்சுமி (45).
ஆண்டியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களாக ஆண்டியப்பன் குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் மது போதையில் அடிக்கடி மனைவியிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த ஆண்டியப்பன் ராம லட்சுமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமலட்சுமி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ஆண்டியப்பன் உடலில் சரமாரியாக வெட்டினார். இதனால் ஆண்டியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன் பின்னர் கோபத்துடன் ராமலட்சுமி தனது அறையில் போய் படுத்துக்கொண்டார்.
இன்று காலையில் எழுந்த ராமலட்சுமி பத்தமடை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவர் நடந்த விபரங்களை கூறியதும், போலீசார் ராம லட்சுமியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண்டியப்பனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ராமலெட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.