ஊராட்சி தலைவியின் கணவர் காதை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர்

ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.
ஊராட்சி தலைவியின் கணவர் காதை கடித்து துப்பிய ஆட்டோ டிரைவர்
Published on

திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (60). இவரது மனைவி தேவி. இவர் தண்ணீர்குளம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பு அருகே சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அப்போது சாலை வழக்கத்தை விட சற்று உயரமாக அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுபற்றி அங்கிருந்த ஊழியர்களிடம் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகாலிங்கம் கேட்டார். மேலும் சாலை உயரமாக இருந்தால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக இருக்கும் என்று கூறினார். இதனால் அங்கிருந்த ஊராட்சி தலைவியின் கணவர் தயாளனுக்கும், மகாலிங்கத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் கோபத்தில் தயாளன் மீது பாய்ந்து அவரது இடது காதை கடித்து துண்டாக துப்பினார். இதில் வலிதாங்க முடியாத தயாளன் காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் துடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துண்டான காதையும் ஐஸ்கட்டி நிரப்பிய டப்பாவில் வைத்து எடுத்து சென்றனர். அங்கு தயாளனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மகாலிங்கத்தை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com