search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் அருகே அ.ம.மு.க. பிரமுகர் கொலை- மனைவி வெறிச்செயல்
    X

    திருப்பரங்குன்றம் அருகே அ.ம.மு.க. பிரமுகர் கொலை- மனைவி வெறிச்செயல்

    • சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தை சேர்ந்தவர் சர்க்கரை(வயது 51). இவர் திருநகர் அ.ம.மு.க. பகுதி செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி அன்னலட்சுமி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சர்க்கரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவும் அவர்களுக்கு இடைேய மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்பு சர்க்கரை வீட்டிற்கு வெளியே இருந்த கயிற்று கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். அவரது 2 மகன்கள் மற்றும் மனைவி அன்னலட்சுமி வீட்டுக்குள் படுத்திருந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் எழுந்த அன்னலட்சுமி, வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவரின் தலையில் பெரிய கல்லை எடுத்து வந்து போட்டுள்ளார். மேலும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த சுடு தண்ணீரை கணவரின் உடல் முழுவதும் ஊற்றியுள்ளார்.

    இதில் வலி தாங்க முடியாமல் சர்க்கரை அலறியுள்ளார். அதன்பிறகும் ஆத்திரம் தீராத அன்னலட்சுமி, கணவர் சர்க்கரையை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். மனைவியின் அடுத்தடுத்த கொடூர தாக்குதலால் சர்க்கரை படுகாயம் அடைந்தார். அவர் வலி தாங்க முடியாமல் அலறினார்.

    தந்தை சர்க்கரையின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டுக்குள் படுத்து தூங்கிய மகன்கள் எழுந்து வந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் வந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே சர்க்கரை ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், சர்க்கரையை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்த அன்னலட்சுமி அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். சர்க்கரை கொலை குறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சர்க்கரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சர்க்கரையின் மகன்கள், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சர்க்கரையை தலையில் கல்லை போட்டும், உடலில் வெந்நீரை ஊற்றியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொடூரமாக கொன்ற அவரது மனைவி அன்னலட்சுமி மீது வழக்கு பதிந்தனர்.

    சர்க்கரையை அவரது மனைவி அன்னலட்சுமி எதற்காக கொன்றார்? அதிலும் கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம்? என்பது தெரியவில்லை. அவர் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும்.

    ஆகவே தலைமறைவாக உள்ள அன்னலட்சுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். கணவரை மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×