

ராயபுரம்:
சென்னை, ஸ்டாலின் அரசு ஆஸ்பத்திரியில் மருந்துவ மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இங்கு மாணவர்களின் லேப்-டாப்புகள் மட்டும் அடிக்கடி திருடுபோனது. இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இது பற்றி விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன், தலைமை காவலர் பரிமளா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் டிப்-டாப் வாலிபர்கள் ஒருவர் மாணவர்போல் விடுதிக்குள் புகுந்து லேப்டாப்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மாணவர் விடுதியிலும் இதே வாலிபர் கைவரிசை காட்டி இருந்தனர்.
விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரிய வந்தது. செம்மஞ்செரியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. கைதான தமிழ்ச்செல்வன் பி.ஏ.பட்டதாரி ஆவார். அவர் டெல்லி, அரியானா, கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவ கல்லூரி மாணவர் விடுதிகளை மட்டும் குறிவைத்து லேப்டாப் திருட்டால் ஈடுபட்டு வந்துள்ளார். டிப்-டாப் உடை அணிந்து மருத்துவ மாணவர்போல் அவர் விடுதிக்குள் சென்றார். அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. திருடிய லேப்-டாப்களை அவர் குறைந்த விலைக்கு விற்று ஜாலியாக செய்து வந்து இருக்கிறார்.
தமிழ்ச்செல்வனிடம் இருந்த மொத்தம் 31 லேப்-டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் கூட்டாளிகள் யாரும் உள்ளனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.