search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்
    X

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்

    • கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது.
    • நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள்.

    ராயபுரம்:

    தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது.

    இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் நாளையுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது.

    இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், 800-க்கும் மேற்பட்ட பைபர்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலத்தையொட்டி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    அவர்கள் தங்களது படகுகளை சரிபார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் நாளையுடன் முடிவதால் நாளை நள்ளிரவு முதல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல உள்ளனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து வருவது வழக்கம். இதனால் மீனவர்கள் தங்களுக்கு தேவையான டீசல், ஐஸ் கட்டிகள், ரேஷன் பொருட்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்டவற்றை விசைப்படகுகளில் ஏற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த 61 நாட்களாக காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லாததால் மீன்வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை அதிகமாக இருந்தது.

    நாளை நள்ளிரவு செல்லும் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள். எனவே அடுத்த வாரம் முதல் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்றும் மீன் விலையும் குறையும் என்று அசைவ பிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக் காயல், மணப்பாடு, பெரிய தாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு கள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

    மீனவர்கள் நாளை நள்ளிரவு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். அதன்படி தொண்டி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக் கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்வ தற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×