search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி- உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
    X

    தாரமங்கலம் அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி- உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு

    • பலத்த ரத்த காயங்களுடன் வடிவேல் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
    • வீடு முழுவதும் ரத்த கரை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் செவந்தானூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45).

    கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலுவின் மனைவி சாலை விபத்தில் இறந்து விட்டார்.

    அதன் பிறகு மகளுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வடிவேல் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்

    கல் உடைக்கும் வேலைக்காக கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் வடிவேல் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த ரத்த காயங்களுடன் வடிவேல் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவசர அவசரமாக வடிவேலுவின் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்காக மின்சார எந்திரத்தை வரவழைத்து அருகிலுள்ள மயானத்திற்கு கொண்டு சென்று வடிவேலுவின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்து உள்ளனர்.

    இந்த நிலையில் இதுகுறித்து நேற்று இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா மற்றும் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் உள்ளிட்ட போலீசார் வடிவேலு வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் வீடு முழுவதும் ரத்த கரை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வடிவேல் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் இது தொடர்பாக வடிவேலுவின் மகன்கள் சுந்தர்ராஜன், சேட்டு மற்றும் உடலை தகனம் செய்த உறவினர்கள், உடலை எரிக்க உதவிய மின்சார எந்திர உரிமையாளர் உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த கூலி தொழிலாளியின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×