

சுரண்டை:
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டைக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் சுரண்டை அருகே உள்ள குலையநேரி ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் வந்தது.
அப்போது, இந்த பஸ் மீது பின்னால் புளியங்குடியில் இருந்து சுரண்டை நோக்கி வந்த மற்றொரு டவுன் பஸ் மோதியது.
இதில் டவுன் பஸ்சின் முன்புறம் முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்தது. மேலும் பஸ்சில் இருந்த மாணவர்கள் உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசாரும் விரைந்து சென்றனர். ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.