search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயரிங் கல்லூரி 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி
    X

    என்ஜினீயரிங் கல்லூரி 2-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி

    • விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
    • மாணவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவர்.

    இவர் கோவை வேலந்தாவளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடந்தது. அப்போது மாணவர் தேர்வு எழுதும் போது காப்பியடித்ததாக தெரிகிறது.

    இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.

    மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் உனது பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என எச்சரித்தனர். ஆனால் மாணவர் பெற்றோரை அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாணவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது பேராசிரியர்கள் அவரிடம் மீண்டும் நீ உனது பெற்றோரை அழைத்து கொண்டு வா என தெரிவித்தனர்.

    இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.

    வலியால் மாணவர் அலறி துடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாடியில் இருந்து மாணவர் குதித்த தகவல் அங்கு படிக்கும் சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர் கீழே குதித்ததற்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×