பஸ் படிக்கட்டில் தொங்கியபடிசென்ற 9-ம்வகுப்பு மாணவன் தவறிவிழும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறது

பஸ் படிகட்டில் தொங்கியபடி ‘பந்தா’ காட்டும் மாணவர்களை போலீசார் எச்சரித்தும் இது தொடர்கதையாகி வருகிறது. மேல்மருவத்தூர் அருகே இன்று காலை பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஸ் படிக்கட்டில் தொங்கியபடிசென்ற 9-ம்வகுப்பு மாணவன் தவறிவிழும் வீடியோ காட்சி வைரலாக பரவுகிறது
Published on

மதுராந்தகம்:

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதனை கண்டிக்கும் பஸ் டிரைவர்கள் கண்டக்டர்கள் மற்றும் பயணிகளிடம் அவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினந்தோறும் நடந்து வருகின்றன.

பஸ் படிகட்டில் தொங்கியபடி 'பந்தா' காட்டும் மாணவர்களை போலீசார் எச்சரித்தும் இது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மேல்மருவத்தூர் அருகே பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்யூரில் இருந்து அச்சரப்பாக்கம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண்.19) சென்றது. இதில் தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ்சின் இரண்டு பக்க படிக்கட்டிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

மேல்மருவத்தூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி வந்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தவறி நடுரோட்டில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக பின்னால் வேறு வாகனங்கள் வராததால் அந்த மாணவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

மாணவர்கள் பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்வதை பின்னால் வாகனத்தில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அப்போது மாணவர் தவறி விழும் பதைபதைக்கும் காட்சியும் பதிவானது.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com