search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த தாயை குத்தி கொன்ற மகன்
    X

    காதலியை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த தாயை குத்தி கொன்ற மகன்

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    • கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    ராம்ஜிநகர்:

    திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது 55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜகுமாரன்(29) என்ற மகனும், வளர்மதி(28) என்ற மகளும் உள்ளனர்.

    வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜகுமாரன் திருச்சி சாஸ்திரி ரோட்டில் ஒரு நகைகடையில் வேலை செய்து வருகிறார். லிங்கம் தினமும் வியாபாரத்திற்காக மார்க்கெட் சென்று பழங்கள் வாங்கி வருவது வழக்கம்.

    நேற்று இவர் வழக்கம்போல பழங்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட் நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்த லிங்கம் மற்றும் அவரது மகன் ராஜகுமாரன் ஆகியோர் கொடிமலரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலசந்தர், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட கொடிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    மகன் ராஜகுமாரனே தாய் கொடிமலரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ராஜகுமாரன் தனது தந்தை வழி உறவினர் மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் தனது உறவினர் மகளைதான் திருமணம் செய்யவேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ராஜகுமாரன் கடந்த 6-ந்தேதி விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ராஜகுமாரன் வீடு திரும்பினார்.

    வீட்டுக்கு வந்தபிறகு தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு கொடிமலரிடம் வற்புறுத்தினார். அதற்கு கொடிமலர் பிடிவாதமாக மறுவிட்டார். இது ராஜகுமாரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று அதிகாலை லிங்கம் கடைக்கு சென்ற நிலையில் கொடிமலருக்கும், ராஜகுமாரனுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் கத்தியால் கொடிமலரை குத்தி கொலை செய்தார்.

    பின்னர் யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×