

போரூர்:
கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் காலனியை சேர்ந்த தம்பதிகளின் 16 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு அதே பகுதியில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அங்கித்குமார் சிங் (29) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு வடபழனி போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், ஏட்டு வெங்கடப்பன், பாக்யராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பெயிண்டர் அங்கித்குமார் அங்கு மாணவியை மயக்கி கடத்தி சென்று இருப்பது தெரிந்தது.
செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் அவர்கள் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. விரைந்து சென்ற போலீசார் அங்கித் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாணவியை பத்திரமாக மீட்டனர்.